தஞ்சாவூர், ஆகஸ்ட் 3 –
காவிரி உரிமையை பறிப்பது காங்கிரஸ் கட்சி என தஞ்சாவூரில் நடந்த பா ஜனதா ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் கூறினார். அணைக்கட்ட முயற்சிப்பதுடன் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பா ஜனதா சார்பில் தஞ்சாவூர் பனங்கள் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் ஒண்டி முத்து, ராமச்சந்திரன், முத்தமிழ் செல்வன், செல்வம், ஜெகதீசன், பரமேஸ்வரி, விஜயேந்திரன் நாஞ்சில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: காவிரி தாயை என்றைக்கு இழந்து விட முடியாது. அதற்கான போராட்டம் தான் இந்தப் போராட்டம். 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டிய காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி புதுப்பித்து இருக்க வேண்டும். இந்திரா காந்தி மிரட்டியதன் விளைவாக அன்றைய காவிரி நீர் சம்பந்த நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.
ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன். கச்சத்தீவை விட்டு கொடுத்ததும், உங்களுடைய காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு காவிரி உரிமை பறிப்பதும் உங்களுடைய காங்கிரஸ் கட்சி தான். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் டுவிட்டர் என்னவெல்லாம் போடுகிறார் என்னவெல்லாமோ ஏளனமாக பேசுகிறார். நீங்கள் ஏன் கர்நாடக மாநிலத்துக்கு செல்லவில்லை? நீங்கள் மாநில தலைவர் உங்களுக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். கர்நாடகத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. கர்நாடகத்தில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆளுகை கட்சியாக வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு காவிரி பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கர்நாடகத்தில் பா ஜனதா ஆட்சி இருந்தபோது தமிழகத்துக்கு ஒழுங்காக தண்ணீர் வந்தது. காவிரி ஆணையத்தை உருவாக்கியது யார்?
சுப்ரீம் கோர்ட் சொல்லி, பாரத பிரதமர் நரேந்திர மோடியால் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்குத்தான் முழு அதிகாரமும், இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. என்றைக்குமே காங்கிரஸ் கட்சி தானாக வந்து தண்ணீர் திறந்து விட்டது கிடையாது.
நமக்கு எப்போதுமே உபரி நீர் தான் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் நீங்கள் (விஜய்) ஹெலிகாப்டரில் வாங்க, தனியாக பேசிக்கலாம் என்று சொன்னார். நீங்கள் தனியாக போனால் உங்களது சொந்த விஷயம் பேசுவதற்கு சென்றதாகத்தான் அர்த்தம்.
நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை எல்லாம் அழைத்துக் கொண்டு போனால் தான் நாங்கள் நம்புவோம். கர்நாடகத்துக்கு போகு ம்போது முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் பிரச்சனை, ஆபத்து ஏற்பட்டால், தமிழகத்தில் உள்ள பா.ஜனதா தொண்டர்கள் உள்பட 8 கோடி பேர் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம். உங்களுக்கு பெங்களூரு போவதற்கு தைரியம் இருக்கிறதா?
ஆனால் வாங்க.. வாங்க.. என்று கூப்பிட்டு விட்டு இப்போ வராதீர்கள்.. வராதீர்கள்.. என்று சொல்கிறார் கர்நாடக முதல் மந்திரி. ஒரு முதலமைச்சரை பார்த்து வாங்க என்று சொல்வது, அதற்குப் பிறகு வேண்டாம் என்று சொன்னால், உண்மையிலேயே தமிழன் என்கின்ற முறையில் விஜய்க்காக நான் வருத்தப்படுகிறேன். ஒவ்வொரு பா ஜனதா தொண்டர்களுக்கும் இனிமேல் தான் விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துக் கொண்டு கட்சியை பலப்படுத்தி, வருகின்ற காலங்களில் உள்ளாட்சி த் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, எல்லா தேர்தல்களிலும் நாம் தான் போட்டியிடுவோம். அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பார்வையாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், விவசாய அணி துணை தலைவர் கோவி. சந்துரு, பொதுச் செயலாளர் ராமலிங்கம், ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் பூண்டி வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னதாக தஞ்சாவூர் மாநகராட்சி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜி சாலை வழியாக பனங்கள் கட்டிடத்தை அடைந்தனர்.



