நாகர்கோவில், ஜூன் 15 –
நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று சரிந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதியினர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். டிரான்ஸ்பார்மரை பார்வையிட்ட பணியாளர்கள் பொதுமக்களிடம் பயப்படத் தேவையில்லை எனவும், மறுநாள் காலையில் பார்க்கிறோம் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தது. அப்போது அதில் உள்ள கேஸ் சிலிண்டர் புகைந்து அந்த பகுதி முழுவதும் பரவியது. மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்தது.
சம்பவம் அறிந்ததும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு சரிந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யும் பணி நடைபெற்றது. அடுத்த நாள் காலை 7 மணிக்கு பிறகு தான் அனைத்து பணிகளும் முடிந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
லேசாக சரிந்து இருக்கும் போதே மின்சார வாரியம் சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும், இத்தனை மணி நேரம் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட வேண்டி வந்திருக்காது என்றும் பொதுமக்கள் புகார் கூறினர். யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.
இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் தான் பகல் வேளையில் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். பள்ளி வேலை நாட்களில் பகல் நேரத்தில் இந்த டிரான்ஸ்பார்மர் சரிந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.


