மார்த்தாண்டம், ஜூன் 10 –
மார்த்தாண்டம் அருகே புளிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (47). ஆட்டோ டிரைவர். இவருக்கும் எருமகுடி விளை பகுதியை சேர்ந்த சுஜின் (35) என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதற்காக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று பாதை பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த ஸ்ரீகண்டன் ஆட்டோவை காவல் நிலையத்திற்கு வழியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதை பார்த்த சுஜின் வெளியே நிறுத்தி இருந்த ஆட்டோவை அடித்து உடைத்துள்ளார்.
இதை கண்ட ஸ்ரீகண்டன் சென்று ஏன்? ஆட்டோவை சேதப்படுத்தினாய்? என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுஜின் ஸ்ரீகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரீகண்டன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


