களியக்காவிளை, மே 11 –
களியக்காவிளை அடுத்த படந்தாலுமுடு, கள்ளிகூட்டம் பகுதியை சார்ந்தவர் சதாசிவன் (64). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (56) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு சிபு (34) என்ற மகனும், சந்தியா (30) என்ற மகளும் உள்ளனர். சந்தியாவிற்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் சபின் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.
சதாசிவன் மனைவி செல்வி மற்றும் மகன் சிபு உள்ளிட்டோர் நாகர்கோவிலில் தனியாக வசித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இவர்கள் சதாசிவனை தனியாக விட்டு விட்டு பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். சதாசிவன் கூலிவேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சதாசிவன் களியக்காவிளை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு இருவரும் என் விட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம். கடந்த மார்ச் 24ம் தேதி என் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, என் மகன் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றனர். எனது ரேஷன் கார்டை தாருங்கள் என நான் பலமுறை அலைபேசி மூலமாக கேட்டும் தரவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி எனது மொபைல் போனில் மிஸ்டு கால் வந்தது. நான் திரும்ப அழைத்த போது தகாத வார்த்தைகள் கூறி கொன்று விடுவேன் என எனது மனைவி செல்வி மற்றும் மகன் சிபு ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆகவே நான் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறேன். போலீசார் நடவடிக்கை எடுத்து எனது ரேஷன் கார்டை மீட்டு தர வேண்டும் என போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


