கன்னியாகுமரி, ஜன. 29 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விபத்துகளை குறைக்கும் முன்னெடுப்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்தபடி 100 இருசக்கர வாகனங்கள் பங்கு பெற்ற “நோ ஹெல்மட் நோ என்றி” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா துவக்கி வைத்தார். கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் செல்லதுரை பேரணியில் சிறப்புரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு பேரணியானது கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து துவங்கி விவேகானந்தபுரம், பழத்தோட்டம், மகாதானபுரம் வழியாக ஜீரோ பாயிண்ட் -இல் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் காவல்துறையினரும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.



