சேலம், ஜூலை 20 –
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கான பணியில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும். பொது மக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படுவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்று பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 485 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதில் 19 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் தலா ரூ.2.00 இலட்சம் வீதம் விபத்தில் மரணம் அடைந்த 13 மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 26.00 இலட்சம் மதிப்பில் விபத்து நிவாரண நிதி உதவியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 18 மாற்று திறனாளிகளுக்கு ரூ 29.44 இலட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்கள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 750 மதிப்பில் காதோலி கருவிகள் என மொத்தம் ரூ 55.45 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.



