இராமேஸ்வரம், ஆகஸ்ட் 13 –
இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே இருப்பு பாதை சார்பு ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை கருவி ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் உளவுத்துறை தகவல் அடிப்படையிலும் விழாவை சீர்குலைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ராமேஸ்வரம் தீவுப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய கடற்படையினர் கடல் எல்லை பாதுகாப்பு, மத்திய இருப்பு பாதை போலீசார், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் உலக புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில், பாம்பன் சாலை, பாலம் ரயில் பாலம், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



