தருமபுரி, டிசம்பர் 31 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு தினசரி அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கோயம்புத்தூர், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, சோமனஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சிக்குப்பட்ட பேருந்து நிலையம் எம்ஜி ரோடு, கடைவீதி, தக்காளி மண்டி முதல் காவல் நிலையம் வரை சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு பேரூராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளனர். மேலும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைத்து கடை விற்பனைக்காக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் பொங்கல், கோயில் விழாக்கள் உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் பி. கே. சிவா ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளித்தார்.



