நாகர்கோவில், மார்ச் 23 –
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகள் வாயிலாக பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேச்சிப்பாறை பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தாங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் வலிமை குறித்து மலைவாழ் மக்களிடையே கலந்துரையாடப்பட்டுது. எவ்வித பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளுக்கும் அடிபணியாமல், மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும், நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பேச்சிப்பாறை மலைவாழ் மக்களின் பங்களிப்பு 100 சதவீதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விடுபடாமல் வாக்களிக்கத் தேவையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழாவில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் சந்தித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வுகளில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வருவாய்த்துறை அலுவலர்கள், மலைவாழ் மக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



