கன்னியாகுமரி, ஜூலை 30 –
குமரி மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 உணவகங்களுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் தேநீர் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில் கன்னியாகுமரி சன்னதி தெரு, மெயின் ரோடு, காந்தி மண்டபம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட 6 உணவகங்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 3 உணவகங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 7 உணவகங்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் ஒரு உணவகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 13 உணவகங்ளுக்கு மொத்தம் 1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்த நான்கு உணவுகளுக்கு ரூ. 20,000 என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள் முதன்முறை தவறு கண்டறியப்பட்டால் ரூ.10,000, இரண்டாவது முறை கண்டறியப்பட்டால் ரூ 15 ஆயிரம், 3வது முறை கண்டறியப்பட்டால் ரூ. 20,000 அபராதத்துடன் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
இது போன்ற சோதனைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வர்த்த நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு வாட்ஸ் எண் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெயராம் பாண்டியன் தெரிவித்தார்.



