திருப்பத்தூர், ஆக. 5 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை வருவாய்த்துறையினர் பிடித்து, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சின்ன வேப்பம்பட்டு ஏரியில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையில், வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் உரிய அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் அள்ளி கடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, மேல்நடவடிக்கைக்காக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



