ஈரோடு, மே 29 –
ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு நீர் நிலைகள் மாசுபடுவதை தடுத்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஈரோடு மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, நஞ்சை தளவாய்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு சாயத் தொழிற்சாலை மற்றும் சூரியம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு தோல் தொழிற்சாலைகள் அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையொட்டி அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பெரிய அக்ரஹாரம் பகுதியில் அனுமதி பெறாமல் ஒரு டையிங் தொழிற்சாலை செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையொட்டி அந்த டையிங் பட்டறை இடித்து அகற்றப்பட்டது.


