நாகர்கோவில், ஜூன் 16 –
கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால் கடற்கரை பகுதிகள் மீனவ மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் இன்று நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால் கடலோர கிராமத்தில் தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
கடல் நீர் உட்புகுவதால் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தற்போதைய நிலவரம் மற்றும் கள சூழ்நிலைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கடல் நீர் உட்புகுதலை தடுக்கும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் சுழற்சி நிதியின் மூலம் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் “கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தற்போது நிலவும் கடல் நீர் உட்புகுதல் பிரச்சினையின் தீவிரத்தையும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு, ஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து, தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைவாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் மற்றும் ஆதரவுகளும் வழங்கப்படும் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், மீன்வளத்துறை செயற்பொறியாளர் பிரேமலதா, உதவி இயக்குநர் தீபா, விர்ஜில் கிராஸ், கணபதிபுரம் பேரூராட்சி தலைவி ஸ்ரீவித்யா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



