தென்தாமரைகுளம் டிச 13, அய்யாவழி புனித வேதநூலான அகிலத்திரட்டு அம்மானை அருளிய தாமரைகுளம்பதியில் புனித அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை மாவட்டம் துலங்கும்பதி துவரையம் பதியிலிருந்து கடந்த 8-ம் தேதி துவங்கிய ஊர்வலம் நான்கு மாவட்டங்களை கடந்து நேற்று காலை 7.00 மணிக்கு தாமரைகுளம் பதியை வந்தடைந்தது. அகிலத்திரட்டு அம்மானை புனித யாத்திரை நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர். என்.ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் 108 பதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட திருநாமம் மற்றும் திருப்பதத்தை அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அனுப்பி வைப்பதற்காக பெற்றுக்கொண்டார். அதன் பின் தாமரைகுளம் பதி குரு பரம்பரை அறக்கட்டளை சார்பில் துவங்க உள்ள அய்யாவழி ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் விழாவில் ஐந்து பதிகளின் குருமார்கள், அவதாரப்பதி நிர்வாகிகள், அகிலஉலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் மற்றும் அன்பு கொடி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


