தஞ்சாவூர், ஜூலை 23 –
டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டித்தும், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 39 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஹரிஷ் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலர் அருளரசன், மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரசுராமன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 39 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.



