தருமபுரி, ஏப்ரல் 27 –
தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் வேடக்கட்டாடு ஊராட்சியில் டி. அம்மாபேட்டை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1,300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் டி. அம்மாபேட்டையில் உள்ள திருவண்ணாமலை சாலையில் காலிக்குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய ஆப்டர் நியமிக்கப்பட்ட பின்னர் குடிநீர் விநியோகம் சீராகும் என உறுதியளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



