கன்னியாகுமரி, நவ. 12 –
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயரை திமுகவினர் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்துக்கு தனது சகாக்களுடன் வந்த தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாபெரும் வரலாற்றுப் பிழையினை நிகழ்த்திச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான அவதூறு செய்திகளை சொல்லியுள்ளார். காமராஜரின் தில்லி வீட்டை ஜனசங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீயிட்டு அவரை கொலை செய்ய முயன்றதாக, வீண்பழி சுமத்தியுள்ளார்.
காமராஜர் பெயரை தனது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பேசிய திமுக அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம். பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வருவதாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதியளித்து விட்டு பின்னர் அதனை நிராகரிப்பு செய்தார். ஆகவே, பசுவதை தடுப்புச்சட்டம் கொண்டுவர வலியுறுத்தி 7.11.1966 இல் மக்களவை முன்பு சாதுக்கள், சந்நியாசிகள் போராட்டம் நடத்தினர். அப்போதைய காங்கிரஸ் அரசு போராட்டக்காரர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, தில்லி மாநகரில் இருந்த காங்கிரஸ் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்கள் தாக்கப்பட்டன. அப்போது அன்றை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜரின் இல்லமும் துரதிஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வினை, 59 ஆண்டுகள் எவ்வித சத்தமும் இல்லாமல் இருந்து விட்டு, அரசியல் சுயலாபத்துக்காக அமைச்சர் மனோதங்கராஜ் தான் தோன்றித்தனமாக காமராஜ் தேசிய பேரவை என்ற போலியான பெயரில் கருப்புச்சட்டை அணிந்து வந்து உறுதிமொழி என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
காமராஜர் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு எதிராக பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றிய திமுகவினர், இன்று அரசியல் லாபத்துக்காக அநாகரீக அரசியல் முன்னெடுப்புகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், காமராஜரின் ஆன்மா அவரை மன்னிக்காது என்றார் அவர். இதைத்தொடர்ந்து 2026 தேர்தலில் திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவோம் என கோஷமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், செயலர் சி.எஸ்.சுபாஷ், பொருளாளர் பி.முத்துராமன், கன்னியாகுமரி சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் உமாரதி, மாவட்ட பொது செயலர் நீலேஷ் ராம், அகஸ்தீசுவரம் வட்டார பாஜக தலைவர்கள் அனுஷா, அருள்சிவா, ராஜக்கமங்கலம் வட்டார தலைவர் ராஜேஷ், ஒன்றிய பொதுச்செயலர் ராஜன், ஜவான் ஐயப்பன், தினேஷ்நாதன், கனகராஜ், பாரத், ஆனந்த், மதன்மணி, மோகன், பத்மநாபன், இளையராஜா, கார்த்தீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



