நாகர்கோவில், மார்ச் 2 –
ஆண்டு தோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை 4 ம் தேதி அவதார தின விழாவாகும். இதையொட்டி திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியிலிருந்து குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமை பதி நோக்கி வாகன ஊர்வலம் இன்று 3ம் தேதி காலை தொடங்குகிறது. இந்த வாகன பவனி திருச்செந்தூர், கூடங்குளம் ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் மைதானம் வந்தடைகிறது.
இதே போல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன ஊர்வலம் இன்று 3-ம் தேதி காலை தொடங்குகிறது. இந்த ஊர்வலம் திருவனந்தபுரம், பாறசாலை, மார்த்தாண்டம், வழியாக நாகர்கோவில் நாகராஜா திடலில் வந்தடைகிறது. பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது.
நாளை 4 ம் தேதி அதிகாலையில் நாகராஜா கோவிலில் இருந்து ஐயா அவதார தின ஊர்வலம் சாமிதோப்பு புறப்படுகிறது. சாமிதோப்பு தலைமை பதிக்கு ஊர்வலம் சென்றடைந்தபின் பூஜைகள் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகில திரட்டு ஏந்திய ஐயாவின் வாகனம் முன் செல்கிறது.
அது தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து செல்கின்றனர். முன்னதாக இன்று 3ம் தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில் சாமி தோப்பு தலைமை பதிவிலிருந்து தீபம் கொண்டு சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐயா அவதார தின விழாவை ஒட்டி நாளை 4 ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.


