திருப்புவனம், செப். 23 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு தொடர்பாக தனிப்படை காவல்துறையினரால் அழைத்துச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து காவலர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான கோவில் ஊழியர் சக்திஸ்வரன், அஜித் குமாரின் தம்பி நவீன் குமார், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், கோவில் ஊழியர் பிரவீன் குமார் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக சிவகங்கை மாவட்டகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, இவர்களுக்கு 2018 ஆண்டு இயற்றப்பட்ட சாட்சிய சட்டத்தின்படி போலீஸ் பாதுகாப்பு வீட்டில் பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே சக்திஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவியும் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதன் மூலம் வீட்டுக்குள் இருந்தபடியே வெளியே யார் இருப்பதை அறியலாம். மீதமுள்ள நான்கு சாட்சிகளின் வீடுகளிலும் இதேபோல் விரைவில் பாதுகாப்பு உபகரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பொருத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



