சுவாசம் சம்பந்தமான நோய்களை பரப்பும் பார்த்தீனியம் என்ற விஷச்செடி கோத்தகிரி பகுதிகளில் வேகமாக பரவி வளர்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அமெரிக்க நாடுகளில் இருந்து கோதுமை மூலம் இந்தியாவுக்குள் பரவிய இந்த விஷ செடிகள் சமவெளி பகுதிகளில் படர தொடங்கியது தற்போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலையோரங்களிலும் விவசாய நிலப் பகுதிகளிலும் அதிகமாக வளர்வதால் நம் நாட்டில் பயன்படக்கூடிய தாவரங்கள், உணவு பயிர்கள் வளர்வதற்கு பெரும் தடையாக அமைவதோடு இதன் விதைகள் காற்றின் மூலம் பரவி ஆஸ்துமா, சுவாசம் சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது.
மேலும் பறவைகள் வன விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது பசுமை பகுதி என வரையறுக்கப்பட்ட கோத்தகிரி பகுதியில் அந்நிய நாட்டு களைச் செடிகளான பார்த்தீனியம் லேண்டனா என்கின்ற உண்ணிச் செடிகள் வேகமாக பரவி மனித உடல் நலத்திற்கும் , சுற்றுச்சூழலுக்கும் பெறும் ஆபத்தாக அமையும் என்பதால் இதனை கட்டுப்படுத்தி வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டுமென சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.