மார்த்தாண்டம், ஜன- 20
மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலை கடையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் (41) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக அவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் குமரி மாவட்டம் புறப்பட்டு வந்து வீட்டை திறந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 50 கிராம் வெள்ளி நகை, 4 கிராம் தங்க கம்மல் மற்றும் 8,500 ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஆறுமுகம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.