நாகர்கோவில், மே 16:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 21 நாட்கள் நடந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. இதை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருவதோடு படிப்பு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு விளையாட்டு மைதானங்களில் சிறப்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
கோடைகாலத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் கோடைகால பயிற்சிகள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி கடந்த 21 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் தடகளம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 450 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு காலை, மாலை இருவேளை பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா வழிகாட்டுதலின் பேரில் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு காலையில் பால், முட்டை, சிறு பயிறு, பிஸ்கட் வழங்கப்பட்டது. பயிற்சி நேற்று நிறைவடைந்தது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 450 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து பயிற்சியாளர்கள், விளையாட்டு மைதான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து விளையாட்டு அதிகாரி வினு கூறியதாவது:
மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி இந்த கோடைகால பயிற்சி வகுப்புகள் 21 நாட்கள் நடந்தது.
12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். குறிப்பாக 450 பேரை தவிர மூன்றரை வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையில் விளையாட்டில் ஆர்வமுடன் பலர் பங்கேற்று வருகின்றனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 40 மாணவிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு விடுதியில் தங்கி படிப்பதற்கு தேர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.