மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பழனிச்சாமி அங்காடி என்ற பெயரில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் அடங்கிய கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் இடித்து புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 – 2025 புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே அக்கட்டிடத்தில் 6 கடைகளை மட்டும் அகற்றாமல் இடிக்கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும் திமுக நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து உள்நோக்கத்துடன் 6 கடைகளை மட்டும் இடிக்காமல் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக பாஜகவினர் இன்று ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து அனைத்து கட்டிடங்களையும் இடித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் , நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு மனு அளித்தனர். மேலும் முறைப்படி அங்குள்ள அனைத்து கடைகளையும் இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் , உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.



