இராமேஸ்வரம், ஜன. 07 –
ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராம கடல் பகுதியில் கடந்த ஒரே வாரமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள், மீனவர் வலையில் சிக்கி உயிரிழக்கிறதா அல்லது வேறேதேனும் காரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் பெருந்தலை ஆமை, சித்தாமை போன்ற ஐந்திற்கும் மேற்பட்ட ஆமை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமை இனங்களை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் வனத்துறையினர் கடல் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்து மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கடற்கரை ஓரத்தில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பக்கத்தில் வளர்த்து ஆமைகளை வளர்க்கவும் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா கிராம கடற்கரை பகுதியில் கடந்த ஒரு வாரமாக உடல் அழுகிய நிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. திடீரென ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீனவர்கள் விசைப்படகுகளில் சிக்கி உயிரிழக்கின்றதா அல்லது வேறேதும் பாதிப்புகள் உள்ளதா என வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



