தருமபுரி மே 1
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 680 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறையினர் சார்பில் 2022 -ம் ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதியாக ரூ. 5 லட்சம் மேல் வசூல் புரிந்த தருமபுரியை சேர்ந்த 2 மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு ஆளுநரின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா 30 கிராம் வெள்ளி பதக்கங்களை ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் பிரேமா, தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.