நாகர்கோவில், அக். 21 –
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி இன்று குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம், கன்னியாகுமரி உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) ஜெயச்சந்திரன், கிரைம் பிராஞ்ச் காவல் துணை கண்காணிப்பாளர் பிச்சையா, காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சாய்லட்சுமி, ஆயுதப்படை காவல் அருண், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.



