நாகர்கோவில் ஜூன் 1
குமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகர் 21வது வார்டு மெயின் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறி மழைநீர் செல்ல சாலையில் ஓடை அமைக்கும் பணி வெறும் 66 மீட்டர் அளவுக்கு நடைபெற்று வருகிறது. இந்த பணியானது முழுசாலையிலும் நடைபெறாமல் குறிப்பிட்ட பத்து வீடுகளின் முன்பு மட்டும் நடைபெறுவதாகவும், இது மேடான பகுதியாக இருப்பதால் 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருந்து வருகிறது. திடீரென இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதாக கூறி மாநகராட்சி சார்பில் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணி குறித்து இப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும்,
இது மழை நீர் கொண்டு செல்வதற்காக தோண்டப்படும் பணி இல்லை, இப்பகுதி குடியிருப்புகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் தேக்கி வைப்பதற்கான கழிவு நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படாமல் உள்ளது. அந்த வீடுகளில் உள்ள கழிவு நீரை வெளியே கொண்டு செல்வதற்காக இப்பகுதி மக்கள் பிரதிநிதியால் செயல்படுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இப்பகுதியில் உள்ளவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் தடையின்றி செலுத்தியும் மாநகராட்சியால் முறையான அறிவிப்பு வழங்கப்படாமல் திடீரென இரவு முழு வீச்சில் பணி நடைபெற்றதால் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை வீட்டை விட்டு வெளியே கொண்டுவர முடியவில்லை என இதுகுறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சியால் ஓடை தோண்டும் பணி நடைபெறவில்லை என தெரிவித்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து நடைபெறும் பணி குறித்து கேட்டறிந்து முன் அறிவிப்பு இன்றி நடைபெற்ற பணியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணப்பட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு இப்பகுதியில் ஓடை அமைக்கும் பணி நடைபெறுவதை நிறுத்தி பாதாள சாக்கடை திட்டம் பணி நடைபெறும் போது வீட்டின் கழிவு நீர் இணைப்பை அதில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கழிவுநீர் செல்ல நடைபெறும் இந்த ஓடைப்பணியை மேற்கொள்ளக்கூடாது எனவும் மனு அளித்தனர்.