நாகர்கோவில், ஜன. 5 –
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சென்ற அந்தியோதயா ரயில் மீது ஆரல்வாய்மொழி பகுதியில் வைத்து மர்ம நபர்கள் திடீரென்று சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக அந்த பகுதியில் தண்டவாளத்துக்கு செல்லும் சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வட மாநிலத்தை சேர்ந்த சிலர் தண்டவாளத்தை சேர்ந்த சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றது தெரிய வந்தது.
இதை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் பணிபுரிவதும், சம்பவ தினம் தண்டவாளம் அருகில் சிலர் நின்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் அங்கு பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுரோ பராயோ (19) என்பவர் ரயிலில் கல் வீசிய நபர் என தெரிய வந்தது. அவரை போலீசார் இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்த போது குடிபோதையில் விளையாட்டாக கல் வீசியதாக அவர் கூறினார். தொடர்ந்து அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



