நாகர்கோவில், டிசம்பர்.23-
தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைக்கும் அமைப்பு 2018-ம் ஆண்டு மதுரை நகரில் தொடங்கப்பட்டது. இன்று 40-க்கும் மேலான நாடுகளில் கிளைகளை உருவாக்கி வளர்ந்துள்ள இந்த அமைப்பு தனது 16வது உலக மாநாட்டினை வரும் ஜனவரி 8, 9, 10, 11 நாட்களில் மதுரையில் “சங்கம் 5” எனப் பெயரிட்டு நடத்துகிறது.
உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பங்கேற்பு
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 50க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து சுமார் 2000 தமிழ்த் தொழிலதிபர்களும், திறனாளர்களும் கலந்து கொள்ளும் இம் மாநாட்டில்
ரூ. 2000 கோடி அளவிலான தொழில் வணிகப் பரிமாற்றங்களும் ஒப்பந்தங்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து மட்டுமே சுமார் 100 தமிழர்கள் வருகிறார்கள். துபாய், அபுதாபி, ஷார்ஜா, நகரங்களில் இருந்து 150-க்கும் அதிகமான தமிழர்களும், அமெரிக்காவிலிருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை அறிவு பிரிவுகளுக்கான அமெரிக்க இயக்குனர் திரு. செசில் சுந்தர் உள்ளிட்ட 70-க்கும் மேலான தமிழர்களும், மலேசியா- சிங்கப்பூர் -ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 150 க்கும் மேலான தமிழர்களும் பங்கேற்கிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தின் தான்சானியா, சாம்பியா, கென்யா, மலாவி, கானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரீயூனியன் தீவுகள், கசகஸ்தான் போன்ற புதிய நாடுகளிலிருந்தும் தமிழ்த் தொழில் அதிபர்கள் வருகின்றார்கள் என்பது தனி சிறப்பாகும்.
புதிய சந்தை வாய்ப்புகள்
அமெரிக்க வரிவிதிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்துறை, தோல் பொருட்கள் காலணிகள் துறை, வேளாண் உணவு உற்பத்தித் துறை, பொறியியல் – உற்பத்தி மற்றும் கணினித் துறைகளுக்கு இம் மாநாட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இத்துறைகளில் தொழில் வணிகம் செய்யும் தமிழர்களுக்கு கனடா, ஐரோப்பா, அரபு மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் முன் ஏற்பாடுகள் இம் மாநாட்டுக்காகச் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மிகப்பெரிய சந்தை என்ற அடிப்படையில் மும்பை, கோவா, கொல்கத்தா, புதுடில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தொழில் வணிகம் செய்யும் தமிழர்களும் சங்கம்: மதுரை மாநாட்டுக்காக அழைக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூர், மைசூர், சிவமோகா உள்ளிட்ட கர்நாடக மாநிலத்திலிருந்து மட்டுமே சுமார் 150 தமிழ்த் தொழிலதிபர்கள் -வணிகர்கள் வருகிறார்கள்.
சங்கம் 5 மாநாட்டின் நிறைவு நிகழ்வுகள் தமிழரின் பண்பாட்டுத் திருத்தலமாக உருவெடுத்து வரும் கீழடியில் ஜனவரி 11ம் நாள் “உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல்” விழாவுடன் நிறைவு பெறும் மாநாட்டில் பங்கேற்கும் வெவ்வேறு நாடுகளின் தமிழர்கள் தத்தமது நாடுகளின் கொடிகளை கீழடியில் ஏற்றுவதோடு, தத்தமது நாடுகளுக்கென பொங்கற் பானைகளும் வைப்பார்கள். அவ்வாறே தமிழகத்தின் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களிலிருந்து வரும் தமிழர்களும் பொங்கற்பானைகள் வைப்பார்கள். நாட்டுப்புறக் கலைகள், பல்லுயிர் கண்காட்சிகள், சிறு குறு தொழில் செய்யும் பெண்களுக்கான அமைக்கப்படும்.
சங்கம்5 பொது தொழில் வணிக மாநாட்டுக்குள் வெவ்வேறு துறையினருகென தனித்தனி துணை மாநாடுகளும் நடைபெறும் என்பது தனிச் சிறப்பாகும். கணினித் துறையினர், பொறியியல் துறையினர், மருத்துவத்துறையினர், சரக்குப் போக்குவரத்து துறையினர், உயர் கல்வித் துறையினர், மனிதவள மேம்பாட்டு துறையினர் என பல்வேறு துறையினருக்கு தனித்தனி துணை மாநாடுகளும் வெவ்வேறு அரங்குகளில் நடைபெறும்.
மாநாட்டின் நோக்கம்
தமிழரின் உள்ளூர் தொழில்களை, வணிகத்தை, உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் எடுத்துச் செல்வதும், உலகத் தமிழரிடையே தொழில் – வணிக உறவுகளை வலுப்படுத்துவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
தொழில் வணிகம் தொடங்க ஆரம்ப நிதி தேடுவோர் மற்றும் வளர்ச்சி நிதி தேடுவோறுக்கென முதலீட்டாளர்களை சந்திக்கும் “முழு நாள் முதலீட்டாளர்” திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய தொழில் வணிக ஒன்றுகூடலாக அமையப்போகும் இம் மாநாட்டிற்கு தமிழ்நாடு வர்த்தக சங்கம், காவேரி டி.எம்.டி விஷால் சொர்ணபூமி உள்ளிட்ட பல அமைப்புகளும் நிறுவனங்களும் ஆதரவளிக்கின்றன. தமிழக அரசின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்கிறார்கள். இம் மாநாட்டில் பங்குபெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய வழி மூலமாகவோ, 9150060032/35 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அழைத்தோ பதிவு செய்யலாம். என அவர் கூறினார்.



