கிருஷ்ணகிரி, அக். 16 –
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக சார்பில் 22 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் ஐந்து உறுப்பினர்களும் சுயேட்சையாக நான்கு உறுப்பினர்களும், பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் என 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 22 திமுக உறுப்பினர்கள் மற்றும் மூன்று சுயேச்சை உறுப்பினர்கள் என 25 பேர் ஆதரவுடன் ஒன்றாவது வார்டு உறுப்பினர் பரிதா நவாப் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பரிதா நவாப் நகர மன்ற பொருட்களில் உரிய நேரத்தில் கையொப்பம் போடாமல் கோப்புகள் தேக்கம் அடைவதுடன் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்பதும் இல்லை, நகர மன்ற உறுப்பினர்களை மதிப்பது இல்லை நகர மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் தலைமையிடம் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார். அதேபோல் முறையாக நகர மன்ற கூட்டத்தை கூட்டாமல் ஆண்டுக்கு இரண்டு மூன்று கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.
ஆகவே நகராட்சிக்கும் அரசுக்கும் பல்வேறு அவப்பெயர்களை ஏற்படுத்தும் பரிதா நவாப் அவர்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023 பிரிவு 51 இன் படி தகுதி நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகராட்சி ஆணையாளர் ஆவணம் செய்ய வேண்டும் என 23 நகர மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் இடம் மனு அளித்துள்ளனர்.



