தக்கலை, டிச. 6 –
தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (34). இவர் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடையருகே முருகதாஸ் என்பவர் மற்றொரு கடை நடத்தி வருகிறார். முருகதாஸ் தனது கடையின் முன் பகுதியில் ஏராளமான பொருட்களை தொங்க விட்டு விற்பனை செய்திருக்கிறார். அவ்வாறு வைத்திருப்பது மல்லிகாவின் கடையை மறைப்பது போன்று இருந்துள்ளது. இதனால் மறைக்காதவாறு பொருட்களை தொங்கவிட வேண்டும் என கூறி இருக்கிறார்.
ஆனால் முருகதாஸ் அதனை கேட்கவில்லை. எனவே அவரின் மீது தக்கலை போலிஸ் நிலையத்தில் மல்லிகா புகார் செய்தார். ஆனால் அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் முருகதாஸ் தனது செயலை மாற்றிக் கொள்ளவில்லை. ஆகவே மல்லிகா மீண்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தக்கலை போலீசில் மீண்டும் சென்று புகார் செய்தார். ஆனாலும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மல்லிகா நேற்று காலை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று போலிஸ் நிலையம் உள்ளே திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார் தீக்குளிக்க சென்ற மல்லிகாவை தடுத்து நிறுத்தினர். பின்பு அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையத்தில் இளம் பெண் தீ தீக்குளிக்க முயன்ற சம்பவம் தக்கலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



