நாகர்கோவில், நவ. 24 –
நாகர்கோவில் தொல்லவிளை பகுதி சேர்ந்தவர் பிரவீன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரதீபா நாகர்கோவில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது வீட்டருகே மகிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வெளிநாட்டு நாய் (ஜெர்மன் ஷெப்பர்ட்) வளர்த்து வருகிறார்கள். இந்த நாயை அடிக்கடி அவிழ்த்து விடுவது வழக்கமாம். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22ம் தேதி மதியம் நாயை அவிழ்த்து விட்டபோது, பிரதிபாவின் மகள் பிரனிபா (10) என்ற சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியை நாய் கடித்தது. இதில் சிறுமி கை காலில் ரத்த காயம் ஏற்பட்டது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதிபா மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் பிரதிபா, மகிழன் வீட்டிற்கு சென்று கேட்டபோது மகிழன் மற்றும் அவரது மகன் காட்பிரே ஆகியோர் ஆபாசமாக திட்டி அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுகுறித்து பிரதீபா நேசமணி நகர் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் மகிழன் மற்றும் மகன் காட்பிரே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிபாவின் மகன் பிரகீன்ஸ் என்பவரை இதே நாய் கடித்தது. அப்போதும் இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி நாயை கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். தற்போது மீண்டும் நாயை அவிழ்த்துவிட்டு உள்ளதால் நேற்று இரண்டாவது முறையாக பிரதிபாவின் மகளை நாய் கடித்து உள்ளது.



