மார்த்தாண்டம், டிச. 13 –
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜகுமார் (42). கூலித்தொழிலாளி. காட்டாத்துறை, செறுகோல் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (30). இவர் அந்த பகுதியில் உள்ள மண்மேட்டில் இருந்து மணலை திருடி வாகனத்தில் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மணல் கடத்திய வாகனத்தை திருவட்டார் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மணல் திருட்டை போலீசாரிடம் ராஜகுமார் தான் தெரிவித்துள்ளார் என சுமேஷ் அவர் மீது விரோதத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராஜகுமார் பயணம் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமேஷ் அவர் நண்பர்கள் சஜிஷ் (30), அனிஸ (28), சி. அனீஸ் (28), அரவிந்த் (30), பெர்ஜின் (27), அஸ்வின் (27) ஆகியோர் சேர்ந்து ராஜகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ராஜகுமார் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


