இரணியல், டிச. 22 –
இரணியல் அருகே வீடு புகுந்து பைக்கை எரித்த வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருட்டு, தீ எரிப்பு, கொலை மிரட்டல், பைக் எரிப்பு என சம்பவங்கள் நடந்து வருவதால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பெண் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குருந்தன்கோடு அடுத்த வர்த்தகநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் மல்லிகா (43). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இன்ஜினியரிங் கல்லூரி 2ம் ஆண்டு படிக்கும் மகனும், 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். மல்லிகாவுக்கும் இவரது உறவினர் சிபின் (24) என்பவருக்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி இரவு கிறிஸ்டல் மல்லிகா வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கிருந்த பீரோவை திறந்து 3 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம், பித்தளை குடம், பித்தளை குட்டுவம் மற்றும் பயன்படுத்தி இருந்த பத்திரங்களையும் திருடி சென்ற சம்பவம் நடந்திருந்தது. நவம்பர் 6ம் தேதி மல்லிகா குடும்ப விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது இரவு வீட்டு காம்பவுன்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் வீட்டின் சுவர், ஜன்னல் கதவு மற்றும் மின் மீட்டர்களில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருந்த சம்பவம் நடந்திருந்தது.
இந்த சம்பவத்திற்கு சிபின் தான் காரணம் என கிறிஸ்டல் மல்லிகா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் சிபின் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சிபின் கேரளாவுக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து இன்ஸ்டாகிராம் மூலமாக கிறிஸ்டல் மல்லிகாவின் உறவினர் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி அனைவரையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இது குறித்தும் கிறிஸ்டல் மல்லிகா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கிறிஸ்டல் மல்லிகா தனது மகன் மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 1 மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக் தீ பிடித்துள்ளது. மள மளவென தீ பரவியதால் வெளிச்சத்தில் மல்லிகா எழும்பி பார்த்துள்ளார். உடனடியாக அவர் தனது மகனுடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதற்குள் பைக் தீ பிடித்து முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து கிறிஸ்டல் மல்லிகா செல்போன் மூலம் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டு அறிந்து விசாரணை நடத்தினர். சிபினை கைது செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக கூறி சென்றுள்ளனர்.
இது குறித்து கிறிஸ்டல் மல்லிகா கூறும் போது: சொத்து பிரச்சினை சம்பந்தமாக சிபின் என்பவர் கடந்த சில மாதங்களாக எங்களுக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவுகளை செய்து வருகிறார். இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் போலீசார் அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே எங்களை கொலை செய்து விடுவதாக சிபின் மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் தான் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. பைக்குக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சிபின் எங்கள் வீட்டிற்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருந்தால் நாங்கள் 3 பேரும் இன்று சமாதி ஆகி இருப்போம். இதனால் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் சிபினை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தீ எரிப்பு சம்பவம் நடந்திருந்தால் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருவர். அவர்கள் பைக் எப்படி எரிந்தது, தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வுகள் செய்வர். ஆனால் இன்று நடந்த தீ எரிப்பு சம்பவத்தில் எரிந்த பைக்கை அவசர அவசரமாக போலீசார் அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தனர். தடயவியல் நிபுணர்கள் யாரையும் வரவழைக்காமல் காலையிலேயே டெம்போவில் ஏற்றி பைக்கை அப்புறப்படுத்தி விட்டனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



