நாகர்கோவில் செப்டம்பர் 8
கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.இங்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம்,திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகு மூலம் சென்று கண்டு களித்து, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், முக்கடலும் சங்கமம் போன்றவற்றை பார்வையிட்டு செல்வது வழக்கம்.
வழக்கம்போல் சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கம படித்துறையில் இறங்கி பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப் படித்தரையில் பாசிகள் படர்ந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.இதனால் பாசிகளை அகற்றி சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களிலும், பிற விஷேச தினங்களிலும் புனித நீராடுகின்றனர். அது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் முக்கடலில் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.எனவே குமரிக் கடலில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாகவும் புண்ணிய நாட்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் முக்கடல் சங்கமத்தில் படித்துறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படித்துறை கடல் அலை அடித்து அடித்து பாசி படிந்து பாழடைந்து கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த படித்துறை வழியாக கடலில் இறங்கும் போது வழுக்கி தவறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து படித்துறையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அழகு மீனா படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அடிக்கடி அகற்றி பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் கட்டப்பட்டிருந்த படித்துறையில் படித்திருந்த வழுக்கும் தன்மை கொண்ட பாசிகளையும், அங்கு குவிந்திருந்த மணல்களையும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.