மும்பை, டிச. 08 –
ரஷ்யாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்பெர் பேங்க் (Sber bank) மற்றும் ஜேஎஸ்பி ஃபர்ஸ்ட் அசெட் மேனேஜ்மென்ட் ஆகியவை இணைந்து “ஃபஸ்ட் இண்டியா” (First-India) என்ற புதிய பரஸ்பர நிதியை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றன. இது இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) முதன்மைக் குறியீடான நிஃப்டி 50 குறியீட்டின் செயல்பாட்டோடு இணைக்கப்பட்ட முதலீட்டிற்கான அணுகு வசதியை வழங்குகிறது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய இந்த பரஸ்பர நிதியானது, ரஷ்யாவைச் சேர்ந்த சில்லறை (ரீடெய்ல்) முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
உலகளவில் சந்தை பங்கேற்பாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் பங்குச் சந்தை குறியீடுகளில் நிஃப்டி 50 என்பதும் ஒன்றாகும்.
இந்தியாவில் நிஃப்டி 50-ஐ பின்பற்றும் 45-க்கும் மேற்பட்ட ‘பேசிவ் ஃபண்ட்ஸ்’ (Passive Funds) உள்ளன. அதற்கும் கூடுதலாக இந்தியாவுக்கு வெளியே 22 பரஸ்பர நிதிகளும் உள்ளன.
தேசிய பங்குச் சந்தையின், நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ்குமார் சௌஹான் இது தொடர்பாக கூறியதாவது: – “மூலதன ஓட்டத்தை வலுப்படுத்தவும், நம்பகமான குறியீட்டின் மூலம் ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் பங்குச் சந்தை வளர்ச்சியில் பங்கெடுத்து ஆதாயமடையும் வாய்ப்பை வழங்கவும், நிஃப்டி 50 சார்ந்த முதலீட்டுத் தீர்வுகளைத் தொடங்குவதில் ஸ்பெர்பேங்க்-க்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த முயற்சி இந்தியச் சந்தைகள் மீதான வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதோடு, இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கு இடையே நிதிசார் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்குகிறது. இரு நாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய முதலீடு வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், சந்தை இணைப்பை மேம்படுத்தவும், முதலீட்டாளர் பாதுகாப்புத் தரங்களைப் பேணவும், இந்த திட்டங்களுக்கு எளிதான பணப்புழக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஸ்பெர்பேங்க் உடன் இணைந்து செயல்பட தேசிய பங்குச் சந்தை பொறுப்புறுதி கொண்டிருக்கிறது ” என்றார்.
ஸ்பெர் பேங்க்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாகக் குழுத் தலைவருமான ஹெர்மன் கிரெஃப் பேசுகையில்: “உலகின் முக்கியப் பொருளாதாரச் சந்தைகளில் ஒன்றான இந்தியப் பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்ய எங்களின் இந்த புதிய திட்டம் வழிவகுக்கிறது. இந்தியச் சொத்துக்களில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய விரும்பும் ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு நேரடியான வழிமுறைகளோ அல்லது விருப்பத் தேர்வுகளோ இதுவரை ஏதும் இருக்கவில்லை. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய மற்றும் திறமையான நிதிசார் பாலத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.



