தமிழ்நாடு காவல் துறையில் 2-ம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அடிப்படைக் காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில் 04.12.2024ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. அடிப்படை பயிற்சியின் போது புதிதாக காவல்துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஒழுக்கம், கவாத்துப் பயிற்சி, சட்ட வகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல், தற்காப்பு கலைகள், யோகா, ஒட்டுநர் பயிற்சி போன்ற பலவிதமான பயிற்சிகள் திறம்பட வழங்கப்பட உள்ளன. அப்பயிற்சிகளை வழங்க இருக்கும் சட்ட போதகர்கள் மற்றும் கவாத்து போதகர்களுக்கு 25.11.2024 தேதி முதல் 30.11.2024 தேதி வரை பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மதுரை காவல் பயிற்சி பள்ளியில் துறை சார்ந்த சிறப்பு விரிவுரையாளர்களையும், அனுபவமும் திறமையும் மிக்க காவல் அதிகாரிகளைக் கொண்டு நடைபெறுகிறது. காவல்துறை தலைவர் (பயிற்சி) M.V ஜெயகௌரி ஐபிஎஸ் பயிற்சி வகுப்புகளை துவங்கி வைத்து காவல் பயிற்றுநர்களுக்கு அறிவரை வழங்கினார். மதுரை, காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர்கள் தங்குமிடம், உணவு விடுதி, கவாத்து மைதானம், வகுப்பறைகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டார். மதுரை, காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் உன்னிகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் மாரியப்பன் உடனிருந்தனர்.



