கன்னியாகுமரி, ஜூன் 16 –
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. முதல் நாளான நேற்று 298 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் மீன் பிடித்து விட்டு, இரவு கரை திரும்பின.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் தயாராகினர். அதிகாலை முதல் ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. அப்போது சின்ன முட்டம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த டென்சன் என்பவருக்கு சொந்தமான கப்பல் மாதா என்ற விசைப்படகில் அதிகாலை 5 மணியளவில் 20 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயாரானார்கள். விசைப் படகு ஓட்டுனர் ரவீண்டன் படகை இயக்க முயற்சித்தார். அப்போது விசைப்படகில் இருந்த பேட்டரி சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது எரிந்தது. இதையடுத்து படகில் இருந்த 20 மீனவர்களும் கடலில் குதித்தனர். அவர்கள் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
விசைப்படகில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதிகாலை நேரத்தில் காற்று அடித்ததால் தீ படகு முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஆகவே தீ விபத்து குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விசைப்படகில் பிடித்த தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இருப்பினும் அந்த விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்த தீ விபத்து பற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர ராஜ பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் விரைத்து செயல்பட்டு விசைப்படகில் பிடித்த தீயை அணைத்ததால். சின்ன மூட்டம் துறைமுகத்தில் சிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.



