நாகர்கோவில் ஏப் 4
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் பேசியதாவது:-
வங்கிகளில் பெற்ற தங்க நகைக்கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதியை திருத்த வேண்டும் எனவும் இதனால் சாமானிய எழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து கூறினார்.
இந்தியாவில் எளிதில் கடன் பெற சாமானிய மக்களுக்கு மிகவும் உதவி வருவது தங்க நகைக்கடன். தங்களின் அவசர தேவைக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இந்த கடனை பெற்று வந்தனர். ஆனால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய தங்க நகை கடன் குறித்த நிபந்தனைகள் சாமானிய மக்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகைக்கடன் பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காலக்கெடு முடியும் போது வட்டி தொகையை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்தி நகையை மீட்டு, மீண்டும் அடுத்த நாள் மட்டுமே நகையை அடகு வைக்க முடியும் என்ற நிபந்தனையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் பொது மக்கள் கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு தங்கள் நகைகளை அடகு வைக்கிறார்கள். 12 மாதங்களுக்கு பின் காலக்கெடு முடியும் பொழுது அசல் மற்றும் வட்டி தொகையை சேர்த்து செலுத்த வேண்டும் என்ற நிலை வரும். அந்நேரத்தில் அந்த ஒரு நாளுக்காக ஏழை மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து மீண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பணம் புரட்ட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். இல்லையெனில் தங்களின் தங்க நகையை அவர்கள் இழக்க நேரிடும். இது மக்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கும்.
ஆகையால் இந்த புதிய நிபந்தனையை ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும் என இன்று பாராளுமன்றத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தேன். பொது மக்களின் நலன் கருதி, அவர்கள் இன்னலை போக்கும் வகையில் அரசு சரியான முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.