கன்னியாகுமரி ஜூன் 11
கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இரு தினங்கள் கடற்கரைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் என்பது கடலில் எந்த அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படும். 2 முதல் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்ப வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்பதால், கடற்கரையோரம் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவுறித்தியுள்ளது.