திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி மைலாப்பூரில் ரேஷன் கடையில் சுமார் 600 குடும்ப அட்டைகள் உள்ளது. மைலாப்பூர் , காலாடிபட்டி, நாச்சகோனான் பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். கடையின் மேற்கூறை முழுவதுமாக பழுதடைந்து உள்ளதால் மழை நீரால் ரேசன் பொருட்கள் நனையும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. கடந்த வருடம் மேற்கூறையில் தார்ப்பாய் கட்டி உணவுப் பொருட்களை பாதுகாத்து வந்தனர். அந்த தார்ப்பாய் கடந்த இரண்டு மாதங்களாக அடித்த ஆடிக் காற்றில் கிழிந்து தொங்கிக்கொண்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை கூட்டுறவு சங்க செயலாளர் சக்திவேலிடம் நேரில் கூறியும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களிடம் மனு கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டிய குட்டத்து ஆவரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலக செயலரின் அலட்சியத்தின் காரணமாக எந்த வித பயனும் இல்லை. இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்



