ஈரோடு, டிச. 23 –
ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமையில் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளை செயலாளர் சந்திரமௌலி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.
எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்கள் சங்க செயலாளர் கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் , செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.



