நீலகிரி டிசம்.01.
கோத்தகிரி முஸ்லிம்
சுன்னத் ஜமா அத் மஸ்ஜிது பரிபாலன சபையின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் தாஜ்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாவா சிக்கந்தர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை 2030ல் முழுமையாக தெரிய வரலாம். அப்பொழுது பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் இதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உணவு உற்பத்தி, குடிநீர் தேவை, ஆற்றல் வளம், பலவிதமான தொற்று நோய்கள் போன்ற சிக்கல்களை மனிதகுலம் வெற்றிகரமாக எதிர் கொள்ளும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். நேனோ தொழில்நுட்பம் வருங்காலத்தில் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்கால சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஒரு மாமருந்தாக மரம் நடுதல் விளங்குகிறது. பசுமை பரப்பை அதிகரிப்பதன் வழியாகத்தான் மனித குலத்தின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும் என்பன போன்ற பல கருத்துக்கள் உரையாடல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சபையின் செயலர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். தொழுகைக்கு வந்த முஸ்லிம் சகோதரர்கள் சுற்றுச்சூழல் கரிசனத்திற்கு அமோக ஆதரவை தெரிவிக்கும் வகையில் பழ மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் நடுவதற்காக வாங்கிச் சென்றனர்.