சங்கரன்கோவில், ஜூன் 3.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ திமுகவினருக்கு அழைப்பு விடுத்து கூறியிருப்பதாவது:
தமிழகத்தை கட்டமைத்த திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்த நாள் விழா இன்று ( ஜூன் 3ம் தேதி)துவங்குகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக
கொண்டாடவேண்டும். அனைத்து உறுப்பினர்கள் வீடுகளிலும் கட்சிக் கொடி ஏற்ற வேண்டும். வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகராட்சி, பேரூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கலைஞர் திருவுருவபடத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் இந்த நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சார்பு அணி நிர்வாகிகள் தங்களது அணிகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் எனவும், மேலும் ரத்ததான முகாம் மற்றும் கண்தானம் உடல் தானம் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், திராவிட மாடல் திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் எனவும், தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். என அழைப்பு விடுத்து அறிக்கையில் கூறியுள்ளார்.



