சுசீந்திரம் டிச 26
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக, ஒரு லட்சம் லட்டுகளை தயாரிக்கும் பணி துவங்கியது.
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் டிசம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால், விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க, 1500 கிலோ மாவு, 4500 கிலோ சீனி, 150 கிலோ முந்திரி பருப்பு, 50 கிலோ ஏலக்காய், 50 கிலோ கிராம்பு மற்றும் 65 டின் எண்ணெய் கொண்டு, 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி, சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், ஜோதிஷ்குமார், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, மகளிர் அணி சைலா ஐயப்பன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த லட்டு தயாரிக்கும் பணியில், 50 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



