தருமபுரி, ஜூலை 15 –
தருமபுரி நகரம் குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், ஆணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
இவ்விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில், அம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு, ரூ.20 லட்சம் மதிப்பிலான ₹500, ₹200, ₹100 மற்றும் ₹50 நோட்டுகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தி பரவசத்துடன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இந்த விழாவில் குமாரசாமிபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா நிறைவில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



