தஞ்சாவூர், ஜூன் 5 –
தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் ரேவதி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து கணினி உதவியுடன் வடிவமைப்பு கணினி உதவியுடன் உற்பத்தி தொழில் துறை தானியக்கப் பயிற்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்க உள்ளது.
இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் பி.இ.மெக்கானிக்கல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியில் கால அவகாச ம் 90 நாட்களாகும். பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்கள் தங்கி பயிலும் வகையில் தேவையான செலவினங்களில் தாட்கோ ஏற்கும்.
பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப மாத ஊதியம் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரைபெறும் வாய்ப்பு உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோ www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



