ஈரோடு, ஜூன் 13 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நாளை வரை 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியையும் கருத்தரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கருத்தரங்கில் 218 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பிறகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கண்காட்சி கருத்தரங்கு நடத்துவதற்கு இந்த ஈரோடு மாவட்டம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளைக் கொண்ட மாவட்டம் இந்த மாவட்டம். மொத்த வேளாண் உற்பத்தியில் ரூ.12 ஆயிரத்து 21 கோடி என்ற அளவில் மாநிலத்தில் எட்டாவது இடம். காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி என்ற முக்கிய பாசன வாய்க்கால்கள் இங்கு இருக்கிறது. இந்தியாவின் மஞ்சள் மாநகரம் இந்த ஈரோடு. இதனால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்து சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோளில் துண்டு போட்டுக் கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக நிற்பவர்கள் நாங்கள். உழைப்பிற்கான பலன்களைப் பெற வேண்டும் என்று தலைவர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட உழவர் சந்தைகளைப் புதுப்பித்து மேலும் உழவர் சந்தைகளையும் உருவாக்கி இருக்கிறோம். உழவு என்பது தொழில் மட்டுமல்ல; அது நமது பண்பாடு. நிலத்தை எல்லா வகையிலும் நாம் பலப்படுத்தி ஏற்க வேண்டும். வளமான நிலங்களிலும் பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட களையாக தான் அதிமுக ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்குத் துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எப்படி எல்லாம் போராடுனீர்கள் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கிறது. கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிகமானது. அவர்களின் உரிமையைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வெயிலிலும் மழையிலும் விவசாயிகள் போராடி அடக்கு முறையை எதிர்கொண்டனர். அந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசி விவசாயிகளுக்குத் துரோகம் செய்தவர்கள் அவர்கள். அதனால் தான் நீங்கள் அவர்களைப் புறக்கணித்தீர்கள். இதுபோன்ற களைகள் நாட்டில் இருந்து மொத்தமாகக் களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பலத் திட்டங்கள் திராவிடமாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தான் அமையும். அதற்கு உழவர்களைப் பாதுகாக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். கருத்தரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி மற்றும் எம்பிக்கள் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம் எல் ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சந்திரகுமார், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.