காரியாபட்டி, ஜூன் 12 –
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் நேற்று திடீர் வெடி விபத்து. மூன்று பேர் பலி. இந்த தொழிற்சாலையில் 175 பேர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ரக பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பேச்சியம்மாள், மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த 3 பட்டாசு தயாரிப்பு அறைகள் திடீர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் தண்டியனேந்தலை சேர்ந்த கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), கல்குறிச்சியை சேர்ந்த செளடம்மாள் (54) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கணேசன் (50), செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வு நடத்தினார். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.