ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 27 –
தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க மேம்பாட்டு பயிற்சிகள், யுனிசெப் அறிவுசார் பங்களிப்புடன் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் துணை தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
பல்கலை சுய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவன மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா. டேனி வரவேற்று பேசுகையில்: மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைதல் சிந்தனையை விதைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 240 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட திட்ட மேலாளர் ரா. ராஜேஷ் பள்ளிகளை பதிவு செய்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்களுக்கிடையே புத்தாக்க சிந்தனைகளை எப்படி உருவாக்குவது அதனை இணைய தளத்தில் பதிவு செய்வது எப்படி என்றும் பின்பு நடைபெறும் போட்டிகள் அதற்கான பரிசுகள் பற்றியும் விளக்கி பயிற்சிகளை வழங்கினார். புத்தாக்க நிறுவன மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்
குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் ப. பிலிப் மில்டன் மற்றும் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் க. இளையராஜா மற்றும் பல்கலை ஐஇடிசி குழு பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



